பெண் சாப்ட்வேர் என்ஜீனியரின் உடலில் கத்திக் குத்துக் காயங்கள்.. பலாத்காரம் செய்து பின்னர் கொலை

சென்னை சிறுசேரி ஐடி பூங்கா வளாகத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்ட டிசிஎஸ் நிறுவன பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் உமா மகேஸ்வரியின் உடலில் கத்திக் குத்துக் காயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் பிணம் இத்தனை நாட்களாக சிப்காட் வளாகத்தில் கிடந்தும் அதைக் கண்டுபிடிக்காமல், சரியாக துப்பு துலக்காமல் இருந்ததற்காக கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் சுப்பையா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். டிசிஎஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராகப் பணியாற்றி வந்தவர் உமா மகேஸ்வரி. இவரது ஊர் சேலம் ஆகும். இவரது தந்தை சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர், தாயார் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர். பிப்ரவரி 13ம் தேதி இரவு பணி முடிந்து வீடு திரும்பக் கிளம்பிய உமா மகேஸ்வரி அதன் பிறகு காணாமல் போய் விட்டார். இதையடுத்து போலீஸில் புகார் தரப்பட்டது. கேளம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிறுசேரி சிப்காட் ஐடி பூங்கா வளாகத்திலேயே உமா மகேஸ்வரியின் இறந்து அழுகிப் போன உடல் கண்டெடுக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை முடிந்து அவரது உடலை போலீஸார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தற்போது உமா மகேஸ்வரியின் மரணம் குறித்த விசாரணை வேகம் பிடித்துள்ளது. முதல் கட்ட விசாரணையில் உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரது வயிறு மற்றும் கழுத்தில் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். அங்கு ஏற்பட்ட பலத்த காயமே அவரது உயிரிழப்புக்கு முக்கியக் காரணம் என்று தெரிகிறது. பெரிய அளவில் ரத்தப் போக்கும் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் தனது அலுவலகத்தை விட்டு வெளியே வந்துள்ளார் உமா மகேஸ்வரி. அலுவலகத்திலிருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து வந்து மெ்யின் ரோட்டை அடைந்து அங்கிருந்து தனது வீட்டுக்குப் போவது உமா மகேஸ்வரியின் வழக்கம். அன்றும் அப்படி்த்தான் நடந்து வந்துள்ளார். அந்த சமயத்தில்தான் யாரோ சிலரிடம் அவர் சிக்கியுள்ளார். அலுவலகத்திற்கு வெகு அருகிலேயே புதர்ப் பகுதிக்குள் அவரை இழுத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அவரை பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் கொலை செய்துள்ளனர். கொலையாளிகள் யார், திட்டமிட்டு செய்தனரா என்பது குறித்துத் தெரியவில்லை. உமாவுக்குத் தெரிந்தவர்கள் இதில் ஈடுபட்டுள்ளனரா, அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு பின்னர் கொலையில் அது முடிந்ததா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த விவகாரத்தில் சமூக விரோதிகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீஸாரிடம் உள்ளது. உமாவின் நெருங்கிய தோழிகளிடமும், அவரது அலுவலக சக ஊழியர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் இதற்கிடையே, உமாவின் இறந்த உடல் அதே வளாகத்தில் இத்தனை நாட்கள் இருந்தும் கூட அதைக் கூட கண்டுபிடிக்காமல் விசாரணையில் அலட்சியம் காட்டியதற்காக கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்