நடிகர் வடிவேலுவை மிரட்டினால் தக்க பாடம் புகட்டப்படும்: சீமான் எச்சரிக்கை!

நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்து வெளியாகும் தெனாலிராமன் படத்திற்கு எதிராக பலரும் கண்டனம் எழுப்பி வரும் நிலையில் இதுகுறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை ஒன்று வெளியிட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில், வடிவேலு நடித்திருக்கும் தெனாலிராமன் படத்தில் கிருஷ்ண தேவராயர் பாத்திரம் தவறாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லி அந்தக் காட்சிகளை நீக்காவிட்டால் வடிவேலு மீது தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம் என சில அமைப்புகள் மிரட்டி வருகின்றன.
இன்னும் படமே வெளிவராத நிலையில், கிருஷ்ண தேவராயர் பாத்திரம் எப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்பது தெரியாமல் ஒரு தமிழ்க் கலைஞனை அவனுடைய மண்ணிலேயே மிரட்டுகிற இந்த செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
உண்மையிலேயே கிருஷ்ண தேவராயர் பாத்திரம் தவறாகச் சொல்லப்பட்டிருந்தால் அதை நீக்கச் சொல்லிப் போராடுபவர்களுக்குப் பக்க பலமாக நாங்களும் நிற்போம்.
தற்போதைய அரசியல் சூழலில் வடிவேலுக்கு ஆதரவாக யாரும் இல்லை என எண்ணி, சிலர் அவரை மிரட்டி உருட்டி பணியவைத்துவிடலாம் என நினைக்கிறார்கள். மொத்த தமிழ்ச் சமூகமும் இந்த விவகாரத்தில் வடிவேலுவின் பின்னால் நிற்கும் என்பதை சம்பந்தப்பட்ட அமைப்புகள் புரிந்துகொள்ள வேண்டும்.
இதையும் தாண்டி வடிவேலுவை மிரட்டுகிற செயல்கள் தொடர்ந்தால் அவருக்கு அரணாகத் திரளவும், சம்பந்தப்பட்ட மிரட்டல் அமைப்புகளுக்கு தக்க பாடம் புகட்டவும் நாம் தமிழர் கட்சி கொஞ்சமும் தயங்காது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்